வீட்டுக் கடனை அடைத்து முடிப்பதா? அல்லது ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்வதா?

கடந்த வாரம் மேற்கூறிய தலைப்பை பற்றி ஒரு வலைபதிவும் மற்றும் அதனோடு ஒரு கணிப்பேட்டையும் பதிவேற்றம் செய்திருந்தேன்.

அந்த பதிவு, உங்கள் வீட்டுக் கடனை அடைத்து முடித்தபின் ஓய்வு காலத்திற்கான முதலீட்டை அதிகப்படுத்துவதா? அல்லது வீட்டுக்கடனின் மாதவாரித் தவணையை மட்டும் செலுத்தி மீதமுள்ள பணத்தை ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்வதா? என்பது குறித்து விவாதித்தது.

இந்த பதிவின் மூலம் திருத்தப்பட்ட கணிப்பேட்டை பதிவேற்றம் செய்கிறேன்.

  1. திரு. P.V.சுப்ரமணியம் (www.subramoney.com) அவர்கள் சுவாரசியம் மிகுந்த ஒரு சாத்தியக்கூறு  பற்றிக் குறிப்பிடுகிறார். அதாவது, உங்கள் வீட்டுக்கடனில் உள்ள நிலுவைத்தொகை ஒரு குறிப்பிட்ட அளவை விட குறைவாக இருப்பின் அந்த கடனுக்கு வங்கிகள் குறைந்த வட்டிவிகிதத்தை அளிக்கலாம். உங்கள் கடன் நிலுவைத்தொகையில் ஒரு பெரும் தொகையை வங்கியிடம் செலுத்தும்போது இது சாத்தியப்படுகிறது.

உதாரணமாக (எனது புரிதல் சரியானது என்ற நம்பிக்கையில் இதை கருத்தில் கொள்வோம்), ₹30 லட்சம் மற்றும் அதற்கு மேலான கடன் தொகைக்கான வட்டி விகிதம் 11% எனவும், அதற்கு கீழான தொகைக்கான வட்டிவிகிதம் 10.5% என கொள்க.  மேலும் எனது கடன் நிலுவைத்தொகை  ₹34 லட்சம் என எடுத்துக்கொள்வோம். இந்த தொகையில் மொத்தமாக ₹5 லட்சம் நான் செலுத்தினால் (முடியும் என்றபட்சத்தில்), நிலுவைத்தொகை ₹29 லட்சமாக குறையும். இந்தச் சூழலில் நான் என் வங்கியை அணுகி என் வட்டி விகிதத்தை குறைக்க கோரலாம். இதன்பின், நான் மாதவாரித் தவணையை மாற்றாமல் தொடர்ந்தால் கடனின் அசல் குறைந்துவரும். மேலும், எனது கடன் கால வரையறையும்(loan tenure) குறையும். திருத்தப்பட்ட கணிப்பேட்டில் இந்த வாய்ப்பு இணைக்கப்பட்டுள்ளது.

  1. Ms.Tinkerbells அவர்கள் பல கணிப்பேடுகள் குறித்து மதிப்புமிக்க கருத்துக்களை வழங்கியுள்ளார். இந்த குறிப்பிட்ட கணிப்பேட்டின் முந்தைய பதிப்பில் மொத்த பணம் செலுத்துவது குறித்த ஒரு குழப்பாமான அம்சத்தை சுட்டிக்காட்டினார்கள். அந்த பிழை இந்த கணிப்பேட்டில் திருத்தப்பட்டுள்ளது.

வீட்டுக்கடனை அடைப்பதா? அல்லது ஓய்வு காலத்திற்கு முதலீடு செய்வதா? ஒருவர் என்னதான் செய்யவேண்டும்?

நீங்கள் உங்களுடைய 40வது  முதல் 45வது (அனேகமாக  40 ஆண்டுகளாவது நீங்கள் ஓய்வு காலத்தில் வாழ்வதற்கான வாய்ப்பு உள்ளது) வயதிற்குள் ஓய்வு பெற விரும்பினால் மட்டுமே ஓய்வு காலத்திற்கு முதலீடு செய்யாமல் விரைவில் வீட்டுக்கடனை அடைப்பது அர்த்தமுள்ளதாகும்.

நீங்கள் உங்களுடைய 60வது வயதில் ஓய்வு பெற விரும்பினால், உங்கள் ஓய்வு காலத்தில் நிதிநிலை / வருவாய்த் தற்சார்பு (financial independence) அடைய,  வீட்டுக்கடனின்  கால வரையறை(loan tenure) முடியும் வரை, மாதவாரித் தவணையை (EMI) மட்டும் செலுத்தி, மீதுமுள்ள பணத்தில் உங்களால் முடிந்த அளவிற்கு முதலீடு செய்யவும். எவ்வளவு விரைவாக உங்களால் முதலீடு செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக முதலீடு செய்யுங்கள்.

திரு. P.V.சுப்ரமணியம் கூறுவதுபோல், உங்கள் வீட்டுக்கடனை விரைவில் அடைக்கக் கோரி உங்கள் பெற்றோர் உங்களை நிர்பந்திக்கலாம். மேலும், நீங்கள் உணர்ச்சிப்பூர்வமாகவும், உளவியல் ரீதியாகவும் மன அழுத்தத்தை சந்திக்க நேரலாம். இந்த நிர்பந்தங்கள் மற்றும் அழுத்தத்திற்கு நீங்கள் உட்படுவீர்களாயின் , ஓய்வு காலத்தில் உங்கள் வருவாய்த் தற்சார்பை எட்ட முடியாத நிலை ஏற்படலாம்.

கடனை அடைப்பதா அல்லது முதலீடு செய்வதா எனத் தீர்மானிக்க உதவும் கணிப்பேட்டை பதிவிறக்கவும் (Download the updated Pay off loan or invest calculator).

This page is the Tamil translation of Updated: Pay off Home Loan or Invest For Retirement Calculator

ஆசிரியர்: freefincal

மொழிபெயர்ப்பாளர்: Venkatesh Jambulingam